தாம்பரம் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த ஆற்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஷ்வா(வயது 20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இன்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மாணவர் விஷ்வா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, உயிரிழந்த விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.