எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
வக்பு தீர்மானத்திற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக முதல்-அமைச்சர் பேசுகையில், அதிமுகவினருக்கு நான் வைக்கும் கோரிக்கை... நேற்று முன்தினம் இதே அவையில் இருமொழிக் கொள்கை பிரச்சினை குறித்து பேசுகையில் நான் ஒன்று சொன்னேன், எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்றிருக்கிறார்.. அங்கு யாரை சந்திக்க உள்ளார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது என்று கூறினேன்.
ஆனால் டெல்லியில் என்னுடைய கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்று சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாலையில், கார்கள் மாறி மாறி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துள்ளார். அது தவறில்லை; அங்கு போய் "தமிழகத்திற்கு வேண்டிய உரிமைகளை கேட்டிருக்கிறேன்" என்று சென்னைக்கு வந்த பிறகு தெரிவித்துள்ளார். அதற்காக இந்த அவையின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படி, இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்தி வந்துள்ளேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னாரோ, அது போலவே அடுத்தமுறை டெல்லி செல்லும்போது வக்பு சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.