ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 Oct 2024 1:37 AM GMT (Updated: 20 Oct 2024 1:37 AM GMT)

ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதான சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களுக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தற்போதைய மாநில தலைவரும், வக்கீலுமான பி.ஆனந்த் உள்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தங்களை ஒரு மனுதாரர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், "மனுதரார்கள் 3 பேரும் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதம் வைத்திருந்தனர். தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்" என்றார். இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story