காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்

காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
சென்னை,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காரைக்காலில் இருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 13 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.