முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி


முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி
x
தினத்தந்தி 18 Sep 2024 3:23 AM GMT (Updated: 18 Sep 2024 5:48 AM GMT)

முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தொழிலாளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கிலிகானப்பள்ளியை சேர்ந்தவர் ரஜினி, தொழிலாளி. இவருடைய மனைவி சுவர்ணா. கடந்த 16-ந் தேதி மாலை அவர் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் தனது மனைவியிடம் முட்டை மசாலா கேட்டார்.

இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவியை ரஜினி தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மகன் சூர்யா குறுக்கிட்டு சண்டையை நிறுத்துமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ரஜினி, சூர்யாவையும் தாக்கி, சூர்யாவின் கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் அவரது தொண்டையில் காயம் ஏற்பட்டு மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சூர்யா சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மனைவி சுவர்ணா கொடுத்த புகாரின் பேரில் ரஜினி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தொழிலாளி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story