உத்தர பிரதேசம்: ஏ.ஐ. மூலம் ஆசிரியை புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர்கள் கைது


உத்தர பிரதேசம்: ஏ.ஐ. மூலம் ஆசிரியை புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 29 Sep 2024 2:12 AM GMT (Updated: 29 Sep 2024 2:45 AM GMT)

ஏ.ஐ. மூலம் ஆசிரியை புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியையின் புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அந்த ஆசிரியை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அந்த ஆசிரியை பணியாற்றிய அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அந்த மாணவர்கள் ஆசிரியையின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து, பின்னர் அதை சமூக வலைதள குழுக்களில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சமூக வலைதளத்தில் பரவிய புகைப்படங்களை நீக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story