உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை - கடலூர் மாவட்ட கலெக்டர்


உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை - கடலூர் மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 15 Sep 2024 2:27 AM GMT (Updated: 15 Sep 2024 4:56 AM GMT)

நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் கீழே இறங்கி வர முயன்றபோது, வழியில் கற்கள் விழுந்தன. இதனால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில் தமிழர்களை மீட்க உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், "தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வானிலை நன்றாக இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு இன்றே தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.


Next Story