உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி – உதயநிதி ஸ்டாலின்


உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி – உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 25 Aug 2024 3:06 PM GMT (Updated: 26 Aug 2024 8:56 AM GMT)

முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடக மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வழங்கிய வாழ்த்துரையில் கூறியதாவது:-

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு முன்னிலை வகிக்கக்கூடிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களே இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்க கூடிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களே, பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் ஐ.பி. செந்தில் குமார் அவர்களே, மயிலம், பேரூர், சிரவை ஆதீனம் உள்ளிட்ட மடாதிபதிகளே, அரசு செயலாளர் சந்திரமோகன் அவர்களே, துறையினுடைய ஆணையர் பி.என். ஸ்ரீதர் அவர்களே, மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உள்ளிட்ட அரசு அதிகாரிகளே, பல்வேறு நாடுகளில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டுள்ள முருக பக்தர்களே, இந்த மாநாட்டிற்காக உழைத்த அனைத்து துறை அரசு அலுவலர்களே, கழக நிர்வாகிகளே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக நடத்தப்படுகின்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை நம்முடைய முதல்-அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்கள். காணொலிக் காட்சி மூலமாக இந்த மாநாட்டில் பங்கேற்று பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.

உலகமெங்குமிருந்து ஆன்மீகப் பெரியோர்கள், அடியார்கள், தமிழ் அறிஞர்கள், முருக பக்தர்கள் பங்கேற்கின்ற இந்த மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்க வாய்ப்பு தந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபுக்கு மீண்டும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். சேகர்பாபு அவர்களை நமது முதல்-அமைச்சர் எப்போதுமே செயல் பாபு என்றுதான் பாராட்டி அழைப்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்க்கும் போதே புரிகின்றது.

செய்தித்தாள்களை, செய்தி சேனல்களை பார்த்தால் எப்போதுமே அமைச்சர் சேகர்பாபு ஏதாவது ஒரு திருக்கோவிலை ஆய்வு செய்து கொண்டுதான் இருப்பார். நம்முடைய முதல்-அமைச்சர் கூறியது போல கோவிலில்தான் அவர் குடியிருப்பார் என்று சொல்கின்ற அளவிற்கு அவர்களுடைய பணி சிறந்து விளங்குகின்றது. இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் அறநிலையத்துறை அறத்தோடு தனது பணிகளை முன்னெடுத்து செல்கிறது என்றால் அதற்குக் காரணம் சேகர்பாபு தான். நாத்திகத் தோட்டத்தில் பூத்த ஆத்திக மலராக சேகர்பாபு. செயல் பாபு மணம் வீசி கொண்டிருக்கிறார். திமுக அரசு திடீரென்று இந்த மாநாட்டை நடத்துகிறது என்று இன்றைக்கு ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இந்த மாநாடு திடீரென்று நடத்தப்படுகின்ற மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில் நம்முடைய முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏராளமான சாதனைகளை செய்து விட்டுதான் இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.

திமுக அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது திமுக ஆட்சிதான். திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போதுதான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர்தான் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்கள். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர்தான் நமது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். இப்படி நம்முடைய தலைவர்கள் வழியில் முதல்-அமைச்சர்.

அறநிலையத்துறையின் சார்பாக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். திராவிட மாடல் அரசு அமைந்து, இந்த மூன்று ஆண்டுகள் மட்டும் 1,900 க்கும் மேற்பட்ட அதிகமான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து வைத்தது நமது முதல்-அமைச்சர். ரூபாய் 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கருக்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 3,800 கோடி ரூபாய் மதிப்பில் 8,500 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு கோவில்களில் உணவு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்-அமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இன்றைக்கு நாட்டிற்கே முன்மாதிரியாக பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் 4,000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் விரைவில் மதிய உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்கள்.

திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். திராவிடம் யாரையும் ஒதுக்காது, எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணத்தை அனைத்து சாதியினரையும். மகளிரையும் அர்ச்சகர் ஆக்கியவர் நமது முதல்-அமைச்சர். அதேபோல் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மற்ற துறைகளைப் போலவே இந்து சமய அறநிலையத்துறையும் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி வருகின்றது. இப்படி அடுக்கடுக்கான சாதனைகளில் எல்லாம் செய்துவிட்டுதான் சிறப்புக்குரிய இந்த மாநாட்டினை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த மாநாடு ஆன்மீக மாநாடாக மட்டுமல்லாமல், பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. கழக அரசின் இந்த முயற்சிகளை எல்லாம் ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்களாகிய நீங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திமுகவின் இளைஞர் அணி செயலாளராகவும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இந்த மாநாட்டில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆன்மீகத்தை எல்லோருக்கும் உணர்த்துகின்ற வகையில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்க போவது உறுதி. இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு எனது வாழ்த்துகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். விடைபெறுகிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story