தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது


தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது
x
தினத்தந்தி 23 Jun 2024 4:24 PM GMT (Updated: 24 Jun 2024 6:05 AM GMT)

காலை, மாலை என இருவேளைகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்து வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 21-ம் தேதி முதல் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை, மாலை என இருவேளைகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்து வருகிறது. இதுவரை நீர்வளத்துறை, இயற்கை வளங்கள்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நகராட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. சட்டசபை தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள்.

கேள்வி நேரம் முடிந்ததும் உயர்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக் கல்வித்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசுவார்கள். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்

மாலை 5 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். இறுதியாக துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.


Next Story