தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 25 Jun 2024 1:26 PM GMT (Updated: 26 Jun 2024 6:54 AM GMT)

இலங்கை வசம் உள்ள 47 மீனவர்கள், 166 படகுகளை விடுவித்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும். தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 25 -ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும். தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும். 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும். கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story