மாநிலக் கட்சி அந்தஸ்து: வி.சி.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து


மாநிலக் கட்சி அந்தஸ்து: வி.சி.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Jun 2024 1:28 PM GMT (Updated: 9 Jun 2024 1:51 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8% வாக்குகள் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளைப் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளது.

மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ள இரு கட்சிகளுக்கும் விஜய் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ள இரு கட்சிகளுக்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை.

புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.

அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story