ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்


ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 24 Jun 2024 1:24 AM GMT (Updated: 24 Jun 2024 1:29 AM GMT)

நடுக்கடலில் 3 விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.

ராமேசுவரம்,

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று கடந்த ஒரு சில நாட்களாகத்தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதில் ஜஸ்டின், ரெய்மண்ட், ஹெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் 22 மீனவர்கள் மீன்பிடித்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 3 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இந்த 3 விசைப்படகுகள், அவற்றில் இருந்த 22 மீனவர்களை சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, 24-ந் தேதி (இன்று) முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமேசுவரம் துறைமுக பகுதியில் நேற்று நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மீன்பிடிக்க சென்று கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளுடன் 22 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு படகு, 4 மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story