காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையாற்றும்: முதல்-அமைச்சர் முக ஸ்டாலின்


MK Stalin
x
தினத்தந்தி 9 July 2024 8:20 AM GMT (Updated: 9 July 2024 9:10 AM GMT)

ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என முக ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்றார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க ஸ்டாலின், கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளித்துள்ளார்.

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்" என்றார்.


Next Story