திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: துரை வைகோ


திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: துரை வைகோ
x
தினத்தந்தி 30 Aug 2024 9:02 AM GMT (Updated: 30 Aug 2024 11:31 AM GMT)

கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக் கூடாது என்று துரை வைகோ கூறியுள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தது, காலை உணவு திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் என அனைத்து திட்டமும் தமிழக அரசால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு இந்தியாவுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது.

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்கிறார். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது. கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக்கூடாது.

திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி மாறாது. கூட்டணி மாற்றம் என்ற நிலையை திமுக தலைமை ஒருபோதும் எடுக்காது. நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். திமுக மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம். மதவாதக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்றக்கூடாது என்பதால் கூட்டணி கட்சிகள் ஒன்றுபடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்."


Next Story