திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 Oct 2024 8:42 AM GMT (Updated: 14 Oct 2024 10:50 AM GMT)

திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 68.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி மற்றும் அதன் உபகோவிலான கிருஷ்ணபுரம் வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி என மொத்தம் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story