தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு


தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 19 Aug 2024 4:18 AM GMT (Updated: 19 Aug 2024 5:09 AM GMT)

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்தார்.

சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதல்-அமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். இவர் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். 2001 முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். ஊரக வளர்ச்சித்துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பதவி வகித்தார்.


Next Story