ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை: அமைச்சர்கள் ஆய்வு


ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை: அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 16 Aug 2024 11:15 AM GMT (Updated: 16 Aug 2024 11:21 AM GMT)

ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை கட்டப்படவுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனி, பாடி மேம்பாலத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை அமைப்பதற்கான இடத்தினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கலர் மீன்கள் உற்பத்தியாளர்கள் தொழில் மேற்கு வங்காளத்தில்தான் அதிகமான தொழிலாக நடந்து வருகிறது. அதற்கு அடுத்தாற்போல் பார்த்தோம் என்றால் தமிழ்நாட்டை எடுத்துகொண்டால் கொளத்தூர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஏறக்குறைய 250 கலர்மீன் வகைகளை உற்பத்தி செய்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். ஏறக்குறைய 2,500 முதல் 3,000 தொழிலாளர்கள் அதில் பணிபுரிகிற வகையிலே செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தொழிலை தமிழகத்தின் முதன்மை தொழிலாக மாற்ற வேண்டும் என்ற வகையிலே கலர் மீன்கள் உற்பத்தியை முதன்மை தொழிலாக மாற்ற வேண்டும் என்கிற வகையில் இதை சிறப்பாக ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின்படி இன்று இந்த பகுதியிலே ஏறக்குறைய 4 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரத்தில் வண்ண மீன்கள் விற்பனை செய்கின்ற வகையிலும் அங்காடியை பல்வேறு தரப்பட்ட மக்கள் அதிகளவில் பார்க்க வேண்டும் என்ற வகையிலும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டிடமானது அமையவுள்ளது.

இதை நடைமுறைபடுத்தும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களுடன் இந்த உலகத்தரம் வாய்ந்த வண்ண மீன்கள் சந்தை வெகுவிரைவில் தொடங்குவதற்கான வழிவகைகள் செய்வதற்கு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story