இன்றுடன் நிறைவடையும் கத்திரி வெயில்.. கோடை மழையால் தணிந்த வெப்பம்


இன்றுடன் நிறைவடையும் கத்திரி வெயில்.. கோடை மழையால் தணிந்த வெப்பம்
x
தினத்தந்தி 27 May 2024 11:54 PM GMT (Updated: 28 May 2024 6:17 AM GMT)

பெரும்பாலான நாட்களில் கோடை மழை பெய்ததால் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது.

சென்னை,

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக கத்திரி வெயிலின் போது வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. சில ஆண்டுகளில் கத்திரி வெயிலே தெரியாத வகையிலும் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள்மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது.

எனினும், கடந்த 8-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது. கடந்த 4-ந் தேதி சென்னை மீனம்பாக்கம், கரூர், வேலூர் உள்பட 15 இடங்கள், கடந்த 7-ந் தேதி திருச்சி, மதுரை உள்பட 11 இடங்கள், 8-ந் தேதி கரூர், நாமக்கல் உள்பட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

தொடர்ந்து 24-ந் தேதி வரை பரவலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் கடந்த 22-ந் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதனால் கத்திரி வெயிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கத்திரி வெயில் நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனாலேயே பள்ளிகள் ஜூன் 6-ந் தேதிக்கு திறக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story