என்னை சந்திக்க வர வேண்டாம்..நானே வருகிறேன்: தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்


என்னை சந்திக்க வர வேண்டாம்..நானே வருகிறேன்: தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Sep 2024 11:24 AM GMT (Updated: 30 Sep 2024 12:18 PM GMT)

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழ வைக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்பது திமுகவினரின் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் உதயநிதி துணை முதல்-அமைச்சராக நியமித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. அத்துடன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர்.

துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு கலைஞர், அண்ணா நினைவிடம், பெரியார் திடல், கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், திமுக முக்கிய தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு தனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்றே தனது பணிகளைத் தொடங்கினார். அதே சமயம் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திமுகவினர் சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், என்னை சந்திக்க வர வேண்டாம் நானே நேரில் வருகிறேன் என்று தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கழகத்தலைவர் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story