பார்முலா 4 கார் பந்தயத்தை காணச் செல்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு


பார்முலா 4 கார் பந்தயத்தை காணச் செல்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 30 Aug 2024 5:43 PM GMT (Updated: 30 Aug 2024 6:56 PM GMT)

பார்முலா 4 கார் பந்தயத்திற்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக பயணச்சீட்டு மூலம் மெட்ரோவில் பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் நடைபெற உள்ளது. தெற்காசியாவிலேயே இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ QR பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.

"Paytm Insider" மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாஸ்களை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிகஅருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.

நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

Paytm இன்சைடர் மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்தச் சலுகைக்கு வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story