முதல் மாநாடு: தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திடீர் உத்தரவு


முதல் மாநாடு: தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திடீர் உத்தரவு
x
தினத்தந்தி 1 Oct 2024 12:07 AM GMT (Updated: 1 Oct 2024 5:37 AM GMT)

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

இதையொட்டி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஜய் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் தாங்கள் வரும் வாகனங்களின் பதிவு எண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தக நகல்களை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று விஜய் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வக்கீல் பிரிவையும் விஜய் உருவாக்கியுள்ளார். மாநாட்டிற்கு வரும் பொது வாகனங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story