திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி


திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 14 Aug 2024 3:24 PM GMT (Updated: 14 Aug 2024 3:38 PM GMT)

தமிழ்நாடு பாரதத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை,

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சிந்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தது. அதில் திராவிட சிந்தாந்தமும் ஒன்று.

திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை. நமது மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் மீனவர்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதற்கும் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதே காரணம்.

முன்பு இந்தியாவை ஆண்ட அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தனர். 1960 போரில் இந்தியா இடத்தை சீனாவிடம் தாரைவார்த்தது. அதேபோல் கச்சத்தீவையும் தாரைவார்த்தனர். இதனால் நமது மீனவர்கள் இன்று அண்டை நாட்டு ராணுவத்தால் சுடப்படுகின்றனர்.

தமிழ்நாடு பாரதத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. எனினும், பள்ளிகள், கோயில்கள், கிராமத் திருவிழாக்கள் போன்றவற்றில் தலித்துகளுக்கு எதிரான சமூக பாகுபாடுகள் குறித்து அடிக்கடி வரும் செய்திகள் மிகவும் வேதனைக்குரியவை மற்றும் மிகவும் வெட்கக்கேடானது. அத்தகைய சமூக பாகுபாடுகள் வெறுக்கத்தக்கவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story