எந்த கட்சியையும் கண்டு திமுக பயப்பட வேண்டிய தேவையில்லை: அமைச்சர் ரகுபதி


எந்த கட்சியையும் கண்டு திமுக பயப்பட வேண்டிய தேவையில்லை: அமைச்சர் ரகுபதி
x
தினத்தந்தி 10 Sep 2024 4:21 AM GMT (Updated: 10 Sep 2024 5:22 AM GMT)

கல்வித்தரம் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதை பொருட்படுத்த முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சிறை கைதிகளை அதிகாரிகள் தங்களது வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. அதனை மீறி அதிகாரிகள் தங்களது வீட்டு வேலைக்கு கைதிகளை பயன்படுத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைதிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு அத்துமீறி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரும் அத்துமீறி பேசினால் நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்று. நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு கேள்விகளை கேட்டு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். எங்களுக்கு எந்த கட்சியும் எதிர்க்கட்சி கிடையாது. யாரையும் கண்டு திமுக பயப்படவேண்டிய தேவையில்லை. மக்கள் நலத்திட்டங்களை செய்து மக்களை சந்திக்கிறோம்.

தமிழகத்தின் கல்வித்தரம் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதை பொருட்படுத்த முடியாது. தமிழகத்தின் கல்வித்தரம் தாழ்ந்துவிட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் தொழில் முதலீடுகள் பற்றி அன்றாடம் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகிறது. அரசு தரப்பிலும் அறிக்கை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story