தமிழக மீனவர்களுக்கு 25-ந் தேதி வரை நீதிமன்றக் காவல்


தமிழக மீனவர்களுக்கு 25-ந் தேதி வரை நீதிமன்றக் காவல்
x
தினத்தந்தி 11 July 2024 12:37 PM GMT (Updated: 12 July 2024 7:20 AM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

புதுக்கோட்டை,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 76 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 196 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்குச் சொந்தமான விசைப்படகில் 5 பேரும், மணிகண்டனுக்குச் சொந்தமான விசைப்படகில் 4 பேரும் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கலந்தர் நைனா முகமது என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 4 பேரும் என மொத்தம் 3 விசைப்படகுகளில் 13 பேர் நெடுந்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 13 பேரையும் சிறைப்பிடித்ததோடு, அவர்களது 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 13 மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது மீனவர்கள் 13 பேருக்கும் வருகிற 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story