காருக்குள்ளே கள்ளக்காதல்...? கண்டித்த மனைவி மீது தாக்குதல்... கோவையில் பரபரப்பு


காருக்குள்ளே கள்ளக்காதல்...? கண்டித்த மனைவி மீது தாக்குதல்... கோவையில் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jun 2024 2:08 AM GMT (Updated: 3 Jun 2024 3:20 AM GMT)

இருவரும் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்ததால் கைநிறைய சம்பளம் கிடைத்துள்ளது.

கோவை,

கோவை பீளமேடு அருகே காந்திமாநகர் ஸ்ரீராம் நகரில் வசிப்பவர் 27 வயது பெண். இவர் ஐ.டி.நிறுவன ஊழியர். இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி.ஊழியரான ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இருவரும் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்ததால் கைநிறைய சம்பளம் கிடைத்துள்ளது. இதனால் இவர்களது இல்லற வாழ்க்கை இனிதாக கழிய தொடங்கியது. இணைபிரியாத தம்பதிகளாக வலம் வந்தனர். இதனை உறவினர்கள் இமைகொட்டாமல் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

இந்த நிலையில்தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தது. சம்பவத்தன்று கணவர், அந்த பகுதியில் தனது காரில் வேறொரு பெண்ணை அமர வைத்து பேசிக்கொண்டிருந்துள்ளார். இது பற்றிய செய்தி மனைவியின் காதுக்கு வந்தது. தேள்கொட்டியது போல் துடித்துப்போன அவள், ஆவேசம் அடைந்தாள். சம்பவ இடத்திற்கு நேரில் சென்றாள்.

தனது கணவரும், அந்த பெண்ணும் காரில் அமர்ந்து கதைபேசிக் கொண்டிருப்பதை கையும் களவுமாக கண்டுபிடித்தாள். உடனே சம்பவ இடத்திலேயே உரக்க கத்த தொடங்கினாள். தனது பார்வைக்கு எல்லை மீறியதுபோல் தெரிந்த கணவனை கண்டித்தாள்.

ஆரம்பத்தில் பயந்து நெளிந்த கணவன், மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்பதால் செய்த தவறையும் பொருட்படுத்தாமல், பதிலுக்கு பேச தொடங்கினார். போய்விடு... எல்லாம் வீட்டில்போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறி உள்ளான். ஆனால் மனைவியின் ஆவேசம் அடங்கவில்லை. இதனால் வாக்குவாதம் வளர்ந்தது. அக்கம், பக்கத்தினரும் வேடிக்கை பார்த்தனர்.

இந்த நிலையில், அவமானத்தில் கோபமடைந்த கணவன்தனது மனைவியை, கரம் பிடித்தவள் என்றும் பார்க்காமல், சரமாரியாக தாக்க ஆரம்பித்தான். எல்லை மீறி எட்டி உதைத்து, கையினால் அடித்து, வயிற்றில் குத்தி கீழே தள்ளிவிட்டு மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து பீளமேடு போலீஸ் நிலையம் சென்ற அப்பெண் கணவன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கணவர் தாக்க்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story