முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம்


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 26 Jun 2024 2:39 AM GMT (Updated: 26 Jun 2024 8:15 AM GMT)

நிலமோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் என்பவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வாங்கல் குப்புச்சிபாளையம் பிரகாஷ் மகள் சோபனா என்பவர் செட்டில்மெண்ட் மூலம் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை கிரையம் எழுதி கொடுப்பதற்காக வந்தார்.

அவருடன் அந்த சொத்தை கிரையம் பெற 4 பேர் உடன் வந்தனர். அசல் ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாகவும், அதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். பெறப்பட்டுள்ளதாக கூறி அதன் நகலை ஆவணதாரர் சார்பில் 2 பேர் அளித்தனர். பின்னர் வெள்ளியணை சார்பதிவகத்தில் இருந்து மதிப்பறிக்கை பெற்றும், வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கியதாக கொடுக்கப்பட்ட 'நான்டிரேசபிள்' (கண்டுபிடிக்க முடியவில்லை) சான்றிதழை பெற்றும் கடந்த மாதம் 10-ந்தேதி ஆவணம் நிலுவையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆவணம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி சோபனாவின் தந்தையான பிரகாஷ், போலியான நான்டிரேசபிள் சான்றிதழ் கொடுத்து பத்திரம் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என மனு அளித்தார். எனவே போலியாக சான்றிதழை கொடுத்து கிரையம் பதிவு செய்த கிரைய தரப்பினர்கள், என்னை மிரட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் கரூர் டவுன் போலீசார், 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என நினைத்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12-ந்தேதி முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் விசாரித்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


Next Story