அருப்புக்கோட்டை: போராட்டத்தின்போது பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு


அருப்புக்கோட்டை: போராட்டத்தின்போது பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sep 2024 8:46 AM GMT (Updated: 3 Sep 2024 8:51 AM GMT)

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் காளிக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காளிக்குமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் பெண் டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.


Next Story