ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம் - நீதிபதி


ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம் - நீதிபதி
x
தினத்தந்தி 7 July 2024 9:26 AM GMT (Updated: 7 July 2024 10:52 AM GMT)

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி எனக்கூறி வரை படங்களை அரசு சமர்ப்பித்தது.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது, "மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் உடல் அடக்கம் செய்ய முடியும். ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு , வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்" என நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்தார்.

பின்னர் காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "பெரம்பூரில் சுமார் 7,500 சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தின் உடலை அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டதுபோல் தற்போது அனுமதி வழங்க வேண்டும்" என பொற்கொடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், "ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். திருவள்ளூரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் மணிமண்டபமும் அமைக்கலாம்" என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே, நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். நீதிமன்றம் அதிகார எல்லையை தாண்ட முடியாது. அரசுதான் முடிவு செய்ய முடியும் என நீதிபதி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்ட செங்குன்றம் அருகே பொத்தூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில், அரசின் அனுமதி பெற்று நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்.

கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என்பதுதான் பிரச்சினை, நினைவு மண்டபம் கட்ட பிரச்சினை இல்லை. கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும்" என நீதிபதி பவானி சுப்புராயன் உத்தரவிட்டார்.


Next Story