போதை தடுப்பு நடவடிக்கை - சென்னையில் 3 நாட்களில் 334 பேர் அதிரடி கைது


போதை தடுப்பு நடவடிக்கை - சென்னையில் 3 நாட்களில் 334 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 10 Sep 2024 10:08 AM GMT (Updated: 10 Sep 2024 10:29 AM GMT)

சென்னையில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடந்த அதிரடி சோதனையில் 334 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான புகாரின் பேரில் 3 நாட்களில் 334 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண். இ.கா.ப அவர்கள் சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டு கைது செய்ய உத்தரவிட்டதன்பேரில், கடந்த 06.09.2024 முதல் 08.09.2024 வரையிலான 3 நாட்கள் "போதை தடுப்பு நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையினால், 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 58 சரித்திரப்பதிவேடு போக்கிரிகள் அடங்குவர்.

சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story