மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு


மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2024 10:42 AM GMT (Updated: 28 Jun 2024 7:46 AM GMT)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 -25ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 -25ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1.13 கோடி பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்ததிட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்த மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடையும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சட்டசபையின் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்களின்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story