"பாஜகவுடன் கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.." - திண்டுக்கல் சீனிவாசன்


பாஜகவுடன் கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. - திண்டுக்கல் சீனிவாசன்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Oct 2024 9:10 AM GMT (Updated: 8 Oct 2024 11:19 AM GMT)

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அண்ணாவால் வளர்ந்த கட்சி, எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று உதயநிதியிடம் சென்றுள்ளது. கலர் கலராக வண்ணம் தீட்டிய ரெயில்களை இயக்கி மக்களிடம் பணம் சுரண்டும் அரசாக மத்திய அரசு உள்ளது. அதைக் கண்டிக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க., வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவுடன் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்கையில், "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. அப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று அவர் கூறினார்.


Next Story