நடத்தையில் சந்தேகம்: பரோட்டா குருமாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மனைவியை கொன்ற தொழிலாளி


மனைவியை கொடூரமாக கொன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 15 July 2024 9:45 PM GMT (Updated: 15 July 2024 11:51 PM GMT)

தென்காசியில் பரோட்டா குருமாவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மனைவியை கொடூரமாக கொன்ற தொழிலாளி சரண் அடைந்தார்.

தென்காசி

தென்காசி சொர்ணபுரம் தெருவைச் சேர்ந்தவர் மஸ்தான் (வயது 48). 2 கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளியான இவர் ஒரு பர்னிச்சா் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா (40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது.

நேற்று காலையில் மஸ்தான் தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் முன்னிலையில் சரண் அடைந்து, தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வீட்டில் பாத்திமா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மஸ்தானை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், பாத்திமாவின் நடத்தையில் நீண்ட நாட்களாக மஸ்தான் சந்தேகப்பட்டு உள்ளார். வேறு யாருடனும் அவருக்கு தொடர்பு இருக்கும் என்று எண்ணியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கடந்த 1 மாதத்திற்கு முன் மஸ்தான் தனது மனைவி மீது தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் 2 பேரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் பாத்திமா தனது நடவடிக்கைகளை மாற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மஸ்தான் தனது மனைவி மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மஸ்தான் தனது மனைவிக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது குருமாவில் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சாப்பிட்ட உடன் பாத்திமா நன்றாக தூங்கிவிட்டார். நள்ளிரவில் பாத்திமாவின் கை, கால்களை மஸ்தான் கட்டினார். பின்னர் சேலையால் தனது மனைவியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் விடியும் வரை தனது மனைவி உடல் அருகில் அமர்ந்து உள்ளார். பின்னர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்துள்ளார். இதுகுறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story