13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்


13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்
x
தினத்தந்தி 7 Jun 2024 3:01 AM GMT (Updated: 7 Jun 2024 3:09 AM GMT)

சிறுமி ஊரில் இருந்தால் சரிப்பட்டு வர மாட்டார் என அவரது பெற்றோர் வெளியூரில் தங்க வைத்து படிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் அச்சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர அந்த வாலிபரிடம் பேசுவதை சிறுமி தவிர்த்து உள்ளார்.

சில மாதங்கள் கழித்து அந்த சிறுமி மற்றொரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபரும் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் சிறுமி ஊரில் இருந்தால் சரிப்பட்டு வர மாட்டார் என அறிந்த அவரது பெற்றோர் வெளியூரில் தங்க வைத்து படிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு பின்னர் ஒரு நாள் அச்சிறுமி ஊரில் இருந்தபோது மற்றொரு வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மற்றொரு வாலிபர் ஒருவர் அச்சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சிறுமியின் நலனை கருத்தில் கொண்டு 1098 சைல்டு லைன் எண்ணிற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சைல்டு லைன் அதிகாரிகள், போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு குழந்தை நல காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.

அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் மூலம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மகேஸ்வரன் (23), லட்சுமணன் (23), வெற்றிவேல் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட மாதேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story