சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக அழைத்து இளம்பெண்ணுடன் உல்லாசம்... உதவி இயக்குனர் கைது


சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக அழைத்து இளம்பெண்ணுடன் உல்லாசம்... உதவி இயக்குனர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2024 2:18 AM GMT (Updated: 2 Aug 2024 2:31 AM GMT)

சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக அழைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

திருமலை,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சித்தார்த்வர்மா (30). சினிமா உதவி இயக்குனர். இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திரா காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் சித்தார்த்வர்மாவுக்கு அறிமுகம் ஆனார்.

முதல் அறிமுகத்தின்போதே, இளம்பெண்ணிடம் பேசிய சித்தார்த்வர்மா, நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க, சினிமாவுக்கு வந்தா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய இளம்பெண் அவரிடம் செல்போன் எண்களை பறிமாறிகொண்டு அடிக்கடி பேசியுள்ளார்.

இதையடுத்து இளம்பெண்ணுக்கு போன் செய்த சித்தார்த்வர்மா, உடனடியாக தனது வீட்டுக்கு வந்தால் போட்டோ செஷன் எடுத்து அவற்றை காண்பித்து சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து இளம்பெண், சித்தார்த்வர்மாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு மதுபோதையில் இருந்த அவர், போட்டோ எடுப்பதாக கூறி இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை இளம்பெண் ஏற்க மறுத்தார். இருப்பினும் சித்தார்த்வர்மா, என்னுடன் அட்ஜஸ்ட் செய்தால் சினிமா வாய்ப்புகள் குவியும் என ஆசை வார்த்தை கூறினார். இதனால் சினிமா வாய்ப்புக்காக இளம்பெண் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து இளம்பெண்ணுடன் சித்தார்த்வர்மா அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சினிமா வாய்ப்பு வாங்கித்தராமல் சித்தார்த்வர்மா தொடர்ந்து ஏமாற்றியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் கச்சிபவுலி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தார்த்வர்மாவை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி இதேபோல் அவர் மேலும் பல இளம்பெண்களுக்கு சினிமா ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்தது. தொடர்ந்து அவரது செல்போனில் உள்ள எண்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story