பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. குழு விசாரணை நாளை தொடங்கும்


பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. குழு விசாரணை நாளை தொடங்கும்
x
தினத்தந்தி 13 Aug 2024 5:26 PM GMT (Updated: 13 Aug 2024 5:35 PM GMT)

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கை விசாரிப்பதற்காக, சி.பி.ஐ. அமைப்பின் சிறப்பு மருத்துவ மற்றும் தடய அறிவியல் குழு நாளை காலை புறப்படும்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு முன் வியாழனன்று (8-ந்தேதி) இரவில், பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றபோது நடந்த ஈட்டி எறியும் போட்டியை பெண் டாக்டர் கண்டு களித்து இருக்கிறார்.

அவருடன் சக மருத்துவர்கள் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு பணியில் இருந்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து ஒலிம்பிக்கை பார்த்தபடியே, ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து வரவழைத்த இரவு உணவையும் சாப்பிட்டு இருக்கின்றனர்.

இதன்பின், அந்த பெண் டாக்டர் அவருடைய தாயாரை தொலைபேசி வழியே அழைத்து பேசியிருக்கிறார். இரவு உணவு முடிந்ததும், சக மருத்துவர்கள் வேலைக்காக அவரவர்களின் பணியிடங்களுக்கு சென்று விட்டனர். பெண் டாக்டர் படிப்பதற்காக கருத்தரங்கு அறையில் தங்கி விட்டார்.

அப்போது, அவர் சிறிது நேரம் தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணியளவில் அவசரகால கட்டிடத்திற்குள் சஞ்சய் ராய் நுழைந்திருக்கிறார். இதன்பின்பு காலை 7.30 மணியளவில் பெண் டாக்டரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த பெண் டாக்டரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற விசயமும் மறுப்பதற்கில்லை என போலீஸ் ஆணையாளர் வினீத் கோயல் கூறியுள்ளார். இதற்காக, உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், கொல்கத்தா ஐகோர்ட்டு முன் இதுபற்றிய வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது.

பெண் டாக்டர் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என அதுபற்றி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மீது நடந்த விசாரணையின்போது, வழக்கை சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

அனைத்து ஆவணங்களையும் கொல்கத்தா போலீசார் உடனடியாக சி.பி.ஐ. அமைப்பிடம் வழங்கும்படியும் கோர்ட்டு கேட்டு கொண்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. இதன்படி, டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் தடய அறிவியல் குழு ஒன்றை அனுப்ப உள்ளது. இதன்படி, நாளை காலை இந்த குழு புறப்படும் என சி.பி.ஐ. அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Next Story