எப்.பி.ஐ-ஆல் தேடப்பட்டு வந்த முன்னாள் ரா அதிகாரி கைது? - யார் இந்த விகாஸ் யாதவ்..?


எப்.பி.ஐ-ஆல் தேடப்பட்டு வந்த முன்னாள் ரா அதிகாரி கைது? -  யார் இந்த விகாஸ் யாதவ்..?
x

விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க புலன் விசாரணை அமைப்பு அறிவித்திருந்தது.

புதுடெல்லி,

அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில், அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான எப்.பி.ஐ. ஆல் தேடப்பட்டு வந்த முன்னாள் இந்திய ரா அதிகாரி விகாஸ் யாதவ் டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஸ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதியப்பட்டிருந்தது.

யார் இந்த விகாஸ் யாதவ்

விகாஸ் யாதவ் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றியுள்ளார். போர் கலை மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் ஆகியவற்றில் அதிகாரிக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார். இந்த கொலை வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளி அல்ல. "CC-1" (co-conspirator) அதாவது இணைச் சதிகாரர் என்று கருதப்படுகிறார். "இந்திய அரசு அதிகாரியான இவர், மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்." என்று எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறினார்.

இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி நிகில் குப்தா கடந்த ஆண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த சூழலில் முன்னாள் ரா அதிகாரி விகாஸ் யாதவின் மூன்று புகைப்படங்களுடன் 'தேடப்படும் குற்றவாளியாக' போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் விகாஸ் யாதவ் என்ற நபர் விகாஸ் என்றும் அமனத் அன்றும் அறியப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கொலை முயற்சியில் அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என மத்திய அரசு மறுத்திருந்தது. அமெரிக்கர் மீதான கொலை முயற்சியை விசாரிக்க விசாரணை ஆணையமும் மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த வழக்கில் இந்திய அரசின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கூடுதல் ஒத்துழைப்பு தேவை என்றும் கேட்டுக்கொண்டது.


Next Story