வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்


வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 30 July 2024 3:42 AM GMT (Updated: 30 July 2024 4:20 AM GMT)

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு,

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையின் காரணமாக, வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில், அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள சூரல்மலை என்ற இடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலம் அடித்து செல்லப்பட்டதால் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப்படை ஈடுபட்டுள்ளது.

மீட்பு பணிகள் நீடிப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


Next Story