வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை


வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2024 8:10 PM GMT (Updated: 10 Aug 2024 1:21 AM GMT)

நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை மந்திரி சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம் என தெரிவித்தனர். மேலும் வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறினர்.


Next Story