உத்தரகாண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு


உத்தரகாண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2024 5:07 PM GMT (Updated: 14 Sep 2024 5:10 PM GMT)

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என கடலூர் கலெக்டர் கூறியுள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்கள் கீழே இறங்கி வர முயன்றபோது, வழியில் கற்கள் விழுந்தன. இதனால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். இதனால், ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுபற்றி கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசிய தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம், நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து அவர், உத்தரகாண்ட் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டார். இதேபோன்று, பித்தோராகார் கலெக்டரை தொடர்பு கொண்டும் பேசியுள்ளார்.

இதுபற்றி கடலூர் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

வானிலை நிலவரம் நாளை எப்படி இருக்கும்? என கவனித்த பின்னர் அதற்கேற்ப அவர்கள் ஊர் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story