சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இளைஞரை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்: வினோத சம்பவம்


இளைஞரை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்
x
தினத்தந்தி 9 July 2024 10:39 AM GMT (Updated: 9 July 2024 12:25 PM GMT)

கடந்த 35 நாட்களில் 6 முறை விகாஸ் தூபேவை பாம்புகள் கடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

லக்னோ,

பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளையே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் தூபே (வயது 24). கடந்த 35 நாட்களில் மட்டுமே இவர் 6 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

கடந்த ஜூன் 2 -ம் தேதி விகாஸ் தூபே அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வாறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலக்கட்டத்தில் 6 முறை விகாஸ் தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ள விகாஸ் தூபே கூறுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாம்பு கடித்ததும் பயப்படாமல் பயமின்றி சிகிச்சை பெற்றதாக விகாஸ் கூறியுள்ளார். 35 நாளில் 6 முறை பாம்புகள் கடிக்கு ஒருவர் ஆளாகும் வினோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story