சாப்பாட்டில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி


சாப்பாட்டில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி
x

கணவன் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுஷாம்பி:

உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டம், இஸ்மாயில்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைலேஷ் (வயது 32). இவர் நேற்று இரவு, கர்வா சாத் பண்டிகைக்காக அவரது மனைவி சவிதா (வயது 30) சமைத்த உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உணவில் விஷம் வைத்து ஷைலேஷை அவரது மனைவி கொன்றுவிட்டதாக குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவிதாவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சவிதா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

திருமணமான இந்து பெண்கள் தங்களின் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் நலனுக்காக விரதம் இருந்து பூஜை செய்யும் தினம் கர்வா சாத் ஆகும். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவன் வேண்டி விரதம் மேற்கொள்வார்கள். இந்த நாளில் பெண்கள் சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஆண்டு நேற்று இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story