20 ஆண்டுகளாக மாணவிகளிடம் அத்துமீறல்.. உ.பி. அரசுக் கல்லூரி பேராசிரியரை தேடும் போலீஸ்

பேராசிரியர் மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை மாவட்ட கலெக்டர் நியமித்துள்ளார்.
ஆக்ரா:
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (வயது 54). இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறியிருக்கிறது.
இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம், உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவரின் பெயரை குறிப்பிடாமல் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் பல வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி ரஜ்னீஸ் குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவு 64(2) (பாலியல் வன்கொடுமை), சட்டப்பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்ட பிரிவு 67 (சைபர் குற்றம்) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது என ஆசை வார்த்தைகளை கூறி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவ் நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை மாவட்ட கலெக்டர் நியமித்துள்ளார். அந்த குழுவில் சப்-கலெக்டர், ஹத்ராஸ் சர்க்கிள் ஆபீசர், சதாபாத் தாசில்தார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.