இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது - நிதின் கட்காரி


இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது -   நிதின் கட்காரி
x
தினத்தந்தி 6 Sep 2024 12:24 AM GMT (Updated: 6 Sep 2024 8:36 PM GMT)

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக நிதின் கட்காரி கூறினார்.

புதுடெல்லி,

உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் கடந்த 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விதிகளைமீறுபவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது? அபராதத் தொகையை அரசுஉயர்த்திக் கொண்டே போகமுடியாது. இதுதான் பிரச்சினை. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண, சாலைகளைப் பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். விதி மீறுபவர்களுக்கு அபராதத் தொகையையும் அதிகரித்து விட்டோம்.ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படி அபராதத் தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் சாலைவிதிமீறல்கள் அதிகரித்துதான் வருகின்றன. சட்டங்களால் மட்டும் சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளை தடுக்க முடியாது. வாகன ஓட்டிகளின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. 2022-ம் ஆண்டு மட்டும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் விபத்தில் சிக்கி 50,029 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story