காஷ்மீர் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - 3 போலீசார் வீர மரணம்

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஜாக்ஹொல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 7 போலீசார் படுகாயமடைந்தனர். மேலும், இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக பாதுகாப்புப்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதேவேளை, வனப்பகுதியில் போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேவேளை, இந்த மோதலின்போது போலீசார் 3 பேர் வீரமரணமடைந்தனர்.
என்கவுண்ட்டர் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.