ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்


ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2024 8:22 AM GMT (Updated: 17 Oct 2024 10:28 AM GMT)

ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று இரவு 8.20 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 137 பயணிகள், 13 விமான ஊழியர்கள் என மொத்தம் 147 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், இந்த விமானத்திற்கு சமூக வலைதளம் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அந்த விமானம் இன்று காலை 7.45 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட ஓடுபாதைக்கு விமானம் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர். விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story