திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: டாக்டர் உள்பட 4 பேர் கைது


திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: டாக்டர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2024 8:10 AM GMT (Updated: 20 Oct 2024 11:21 AM GMT)

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் திருட்டில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப்புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பத்மநாபசுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியது. கோவிலில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் வெண்கலத்தால் ஆன தட்டு திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், திருட்டில் ஈடுபட்டது அரியானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரியானா விரைந்த கேரள போலீசார் அம்மாநில போலீசார் உதவியுடன் கோவிலில் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் என்பதும் அவர் டாக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கோவிலில் திருடப்பட்ட வெண்கல பூஜை தட்டை கைப்பற்றினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story