சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை - சுப்ரீம் கோர்ட்டு


சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 14 Aug 2024 7:25 AM GMT (Updated: 14 Aug 2024 8:53 AM GMT)

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஐகோர்ட்டின் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த முறை தேனி போலீசார் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம்கோர்டில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது

இந்நிலையில் அந்த ரிட் மனு இன்று சுப்ரீம்கோர்ட்டு தலைமை சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதனை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மேல் முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு பிணை வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா..? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மேலும் என்னென்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு ஆணையிட்டார். மேலும் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story