உ.பி.: மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி


உ.பி.:  மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jan 2025 7:43 AM (Updated: 29 Jan 2025 1:23 PM)
t-max-icont-min-icon

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இதனிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை தினமான இன்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிகாலை 3 மணியளவில் மக்கள் அதிக அளவில் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், சிலர் கீழே விழுந்தனர். இதனால், கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மீதமுள்ள 5 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.


Next Story