ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்ததில் 7 பேர் பலி


ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்ததில் 7 பேர் பலி
x
தினத்தந்தி 11 Sep 2024 7:04 AM GMT (Updated: 11 Sep 2024 7:44 AM GMT)

மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஏலூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் டி நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் இருந்து முந்திரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நிடதவோலு மண்டலம் தாடிமல்லா நோக்கி இன்று அதிகாலை மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த மினி லாரி தேவரப்பள்ளி மண்டலத்தில் உள்ள சின்னைகுடம் சிலகா பகால பகுதியில் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறங்கி விளைநிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாரிக்கு அடியில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த கோர விபத்தில் 7 பேர் முந்திரி மூட்டைகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரசிம்ம கிஷோர் உறுதிப்படுத்தினார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஏலூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story