செந்தில் பாலாஜி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு


செந்தில் பாலாஜி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 July 2024 10:32 AM GMT (Updated: 24 July 2024 12:12 PM GMT)

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடந்தது.

புதுடெல்லி,

செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை.

எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வாதம் செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறு தினம் மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை புதன்கிழமை (24-07-2024) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடந்தது.

இந்த விசாரணையில் வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

பென்டிரைவ் கைப்பற்றப்பட்டத்தில் தனது பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து , கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் உள்ளன என அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் . மேலும் உங்களிடம் பதில் இல்லை என்றால் நாளை பதிலோடு வாருங்கள் விசாரிக்கிறோம் என கூறிய நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்


Next Story